கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் மரணம்
கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனியைச்சேர்ந்தவர் ஜோதி என்ற தமிழ்வேந்தன்(30). இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக இருந்து வந்தார். ஈழத்தமிழர்களிடம் மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். குழந்தை காலனியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.
இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் அவர் இருந்து வந்துள்ளார். தனது நண்பர்களிடம் தீக்குளிக்கப் போகிறேன் என்றும் கூறி வந்துள்ளார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
பற்றி எரிந்த உடலுடன் அங்குமிங்கும் ஓடிய அவர் டீக் கடை ஒன்றின் அருகே விழுந்தார்.
அவரை மீட்ட பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தமிழ்வேந்தனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் அங்கு விரைந்த செய்தியாளர்களிடம் தமிழ்வேந்தன் பேசுகையில்,
படித்தவர்கள் இலங்கை தமிழர்களுக்காக பலவித போராட்டங்களை வழிநடத்தி வருகிறார்கள். ஆனால் படிக்காத எனக்கோ வேறு வழி தெரியவில்லை.
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்துவதற்காக எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. இலங்கை தமிழர்களுக்காக உயிரை விட தீக்குளித்தேன். என்னைப்போல யாரும் செய்ய வேண்டாம். அண்ணன் திருமாவளவன் வழியில் போராட்டம் நடத்துங்கள் என்றார் அவர்.
95 சதவீத தீக்காயம் இருந்ததால், அவரை தனியார் மருத்துவமனைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று நள்ளிரவில் தமிழ்வேந்தனின் உயிர் பிரிந்தது.
இதனால் கடலூர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்வேந்தனின் தாயாரும், மனைவியும் கதறி அழுதபடி உள்ளனர்.
தமிழ்வேந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் சென்று பார்த்தார்.













Click it and Unblock the Notifications