இலங்கைப் பிரச்சினை-திருமா. நடைபயணம்
சென்னை: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நடைப்பயணம் செல்லவுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உரையாற்றும்போது, ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதன் மூலம் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதாவது இந்திய அரசு சொன்னால் சிங்களவன் கேட்டு நடப்பான் என்பதையும். புலிகள் ஆயுதங்களைக் கைவிட உடன்படவில்லையெனில் போரைத் தீவிரப்படுத்துவோம் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் ஒரு முறைக்குப் பல முறை போர் நிறுத்தத்திற்குத் தயார் எனவும் இந்திய அரசுடன் நட்புறவையே விரும்புகிறோம் எனவும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்ய சிங்களவர்கள் தயார் என்பது போலவும் புலிகள்தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தைப் பரப்பி தமிழினத்தைக் குழப்பும் முயற்சியில் ப.சிதம்பரம் ஈடுபட்டிருக்கிறார்.
அரசியல் அடிப்படையில் இச்சிக்கலை அணுகாமல். உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழி போட்டுத் திசை திருப்புவதில் முனைப்பாக இருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
மனிதநேய அடிப்படையில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை ப.சிதம்பரத்துக்கோ இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைத்து அதற்கான பேச்சு வார்த்தைக்கு முன்னேற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்
வேண்டுமானால் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என கேட்டுக் கொள்ளலாம்.
ஆகவே, உண்மையைத் திசை திருப்பி சிக்கலை மென்மேலும் நீட்டிக்காமல் ஈழத் தமிழர்களின் எதிர் கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமூகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1, 2 ஆகிய இரு நாள்களில் ஈழம் காப்போம் என்ற முழக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்களின் தலைமையில் ஊர் ஊராய் நடைபயணம் நடைபெறும். இதில் நானும் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.