பைசா பிரயோஜனமில்லா எம்பி்க்கள்-சபாநாயகர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்றும் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறீர்கள். உங்களால் பைசாவுக்கு பிரயோஜனமில்லை என ஆவேசமாக தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 11.00 மணிக்கு வழக்கம் போல் ஆரம்பித்தது. அப்போது தமிழகத்தை சேர்ந்த மதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காகவும், பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாகவும் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சென்று கூச்சலிட்டனர்.
இவர்களின் கூச்சலை தடுக்க முயன்ற சோம்நாத் சட்டர்ஜியின் பேச்சு இவர்களது கூக்குரலுக்கு முன்னால் எடுபடவில்லை. இதையடுத்து அவர் 11.15க்க அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
உணவு இடைவேளைக்கு பின் அவை மீண்டும் துவங்கியது அப்போது மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சட்டர்ஜி உறுப்பினர்களை நோக்கி கூறுகையில்,
நீங்கள் நாட்டு மக்களை அவமதிக்கிறீர்கள். அவர்களது பணத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லாதவர்கள். உங்களின் செயல் கண்டனத்துக்கு உரியது.
உங்களுக்கு எந்த படியும் கிடையாது. அவையை காலவரையின்றி மூடினால் மட்டுமே மக்கள் பணத்தை சேமிக்க முடியும் என நினைக்கிறேன்.
விரைவில் தேர்தை சந்திக்கப் போகிறீர்கள். மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார் சட்டர்ஜி.