தலைமை நீதிபதியை அடையாளம் தெரியாததால் விரட்டிய போலீஸார் - ஓடி தப்பினார்
சென்னை: போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்து வந்த மோதலைத் தடுப்பதற்காக வந்த தலைமை நீதிபதி முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகளையும் போலீஸார் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து வேகமாக அகன்று தடியடியிலிருந்து தப்பினார்.
உயர்நீதிமன்ற காவல் நிலையம் முன்பு போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் பெரும் மோதல் மூண்ட தகவல் அறிந்ததும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா, நீதிபதிகள் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், ரகுபதி, ஜோதிமணி, சசிதரன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, யாரையும் அடிக்க வேண்டாம் என போலீஸாரிடம் கூறியபடி நீதிபதிகள் வந்தனர்.
அந்த சமயத்தில் போலீஸார் மீது வக்கீல்கள் சிலர் கற்களை வீசித் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் படு வேகமாக நீதிபதிகள் மற்றும் வக்கீல்களை நோக்கி ஓடி வந்தனர்.
வருவது தலைமை நீதிபதி என்று தெரியாமல் நீதிபதிகளையும் விரட்டினர். இதையடுத்து முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகள் அங்கிருந்து ஓடி தப்பினர்.
ஆனால் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் மட்டும் மாட்டிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு விட்டது. அவரை அருகில் இருந்த வக்கீல்கள், இவர் நீதிபதி அடிக்காதீர்கள் என்று கூறித் தடுத்தனர்.
இதையடுத்து நீதிபதியை விட்டு விட்ட போலீஸார் அருகில் இருந்த வக்கீல்களை துரத்தி துரத்தி அடித்து விரட்டினர்.
படுகாயமடைந்த நீதிபதி ஆதித்தன் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் இரவில் அவர் வீடு திரும்பினார்.
முகோபாத்யாயாவை தடுத்த வக்கீல்கள்
இந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வக்கீல்களைப் பார்க்க தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியா நேற்று இரவு 9.30 மணியளவில் அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் வந்திருந்தார்.
தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் அரசு மருத்துவமனையின் 2-வது டவரின் 3-வது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்க்க லிப்ட் மூலம் தலைமை நீதிபதி சென்றார்.
லிப்டில் இருந்து வெளியே வந்த அவரை, அங்கு ஏற்கனவே கூடியிருந்த வக்கீல்கள் சூழ்ந்து கொண்டு, சிகிச்சை பெறுபவர்களை பார்க்க விடாமல் தடுத்தனர். மேலும் நீதிபதி முகோபாத்யாயாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை சரியில்லாததை உணர்ந்த நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications