காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வக்கீல்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று போலீசாருடன் நடந்த மோதல் தொடர்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் உள்பட சுமார் 1,200 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் வக்கீல்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி ஹைகோர்ட் வளாகத்தில் ஊர்வலமாக வந்த இவர்கள் திடீரென எஸ்பிளேனடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் உயர் நீதின்றம் முன் என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து அப் பகுதியி்ல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதம்-ஊர்வலம்:
இந் நிலையில் தமிழக பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் நியாயம் கோரி கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
அதே போல ஜார்ஜ்டவுன் கோர்ட்டு வழக்கறிஞர்கள் இன்று காலை சங்கத் தலைவர் முகம்மது கவுஸ் தலைமையில் திரண்டனர். பிறகு அவர்கள் உயர் நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். சுப்பிரமணியம் சுவாமி மற்றும் போலீசாரை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஊர்வலம் காரணமாக ராஜாஜி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடிக்கை பார்க்க வந்த மக்கள்:
இதற்கிடையே ஏராளமான பொதுமக்கள் மோதல் நடந்த உயர்நீதிமன்ற வளாகத்தை வேடிக்கை பார்க்க இன்று வந்தவண்ணம் இருந்தனர்.
காவல் நிலையம் இடம் மாற்றம்:
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட காவல் நிலையம் தற்காலிகமாக எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
எரிக்கப்பட்ட காவல் நிலையத்தில் இப்போது மிஞ்சியிருப்பது சுவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை சீரமைக்க சில மாதங்கள் ஆகலாம்.