அவர்கள் எல்டிடிஈ ஆதரவாளர்கள்-சுவாமி
சென்னை: தமிழகத்தில் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்ட சுவாமி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்களது நடவடிக்கையால் நீதிமன்றங்கள் முடங்கிப் போயுள்ளன.
இவர்களுக்கு புலிகளிடமிருந்து பணம் வருகிறது. இரு தினங்களுக்கு முன் என்னை தாக்கினார்கள். அப்போது என்னை திட்டிக் கொண்டே பிராமணர்களைத் திட்டினார்கள். தேச விரோத கோஷங்களை எழுப்பினார்கள்.
இவர்களுக்கு திமுக அரசு முழு ஆதரவு தருகிறது. ஏற்கனவே விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் திமுக அரசை நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது டிஸ்மிஸ் செய்தேன். இப்போதும் அதைத் தான் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.
(கடந்த 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ரகசியங்களை வெளியிடுவதாகக் கூறி அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைத்தார். அந்த ஆட்சிக் கலைப்புக்கு நெருக்கடி கொடுத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜிவ் காந்தியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும். அப்போது ஜனாதிபதியாக இருந்தது ஆர்.வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது)
சுவாமி மீதான தாக்குதல்-பாஜக கண்டனம்:
இதற்கிடையே சுவாமி மீது நடந்த தாக்குதலுக்கு மக்களவையில் பாஜக கண்டனம் தெரிவித்தது. அக் கட்சியின் மூத்த தலைவர் வெங்கைய்யா நாயுடு, சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசுகையி்ல்,
நீதிமன்றத்தில் அவர் தாக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். நீதிமன்றத்துக்கு அவர் வரும்போது வழக்கறிஞர்கள் ஏதோ செய்ய இருக்கிறார்கள் என்று போலீஸாருக்கு முன்கூட்டியே தெரியும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. தாக்குதல் பற்றி தெரிந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு (பிராமண சமூகத்தினர்) எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எனவே இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசிடம் இருந்து முழுமையான அறிக்கை பெற்று குற்றவாளிகளான வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications