கடையநல்லூர் நகராட்சி-முற்றுகையிட்ட மக்கள்
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் வணிக வரி மற்றும் வீட்டு வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் அலுவலகத்தை சிலர் தாக்கினர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வணிக கடைகளுக்கு 150 சதவீதமும்,வீடுகளுக்கு 25 சதவீதமும் வரி உயர்வு நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதம் செய்தனர்.
இதை தொடர்ந்து நடந்த நகராட்சி கூட்டத்தில் வீடுகளுக்கு வரி 10 சதவிதமாகவும், வணிக கடைகளுக்கு 50 சதவிதமாகவும் வரி நிர்ணயம் செய்து ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு உயர்த்தி சொத்து வரியை ரத்து செய்யகோரி கடையநல்லூரில் அனைத்து வர்த்தக சங்கத்தின் பேரவை சார்பில் இன்று முழு கடையடைப்பு நடந்தது.
இதில் நகர வர்த்தக சங்கம் மற்றும் 13 சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், மேல கடையநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதற்கிடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் நகராட்சி அலுவகத்திற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அலுவலகத்தை சிலர் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.