ராணுவ வீரர் கொலை-திமுக பிரமுகர் கைது !
தேனி: தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மைக்கேல் ஆல்பர்ட். முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று முன் தினம் ராயப்பன்பட்டியில் உள்ள கனரா வங்கி அருகே தலையில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றியதுடன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபு என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட மைக்கேலுக்கும் முன்விரோதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே நடந்த கைகளப்பில் மைக்கேல், பிரபுவை தாக்கியுள்ளார்.
இதையடுத்து பிரபுவின் ஆதரவாளர்களான உத்தமபாளையம் திமுக ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆலிவர் மற்றும் மதன், சவுரி ராஜன், ஆனந்த், அந்தோணி என ஒரு கோஷ்டியினர் மைக்கேலை தட்டிக் கேட்க சென்றுள்ளனர். அப்போது பிரச்சினை முற்றி அவர்கள், மைக்கேலை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.