சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோகலே!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கங்குலி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முகோபாத்தியா, தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான எச்.எல்.கோகலேவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து கோகலே பதவி ஏற்கவுள்ளார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதற்கான விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும்.
மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற கோகலே அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்றவர். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த கோகலே 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை மும்பை அரசு சட்டக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராகவும் பணி புரிந்தார்.
பின்னர் 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி வக்கீலாக பணியாற்றினார். 1994ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 1995ம் ஆண்டு நீதிபதியானார்.
1999ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2007ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications