பேச்சு: துரைமுருகன் அழைப்பு-வக்கீல்கள் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் துரைமுருகன் விடுத்த அழைப்பை வக்கீல்கள் நிராகரித்துள்ளனர்.

பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னையில் இன்று காலை பல்வேறு வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இன்று மாலை உயர்நீதிமன்ற வக்கீல்களையும் சந்திக்க துரைமுருகன் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்த அழைப்பை வக்கீல்கள் நிராகரித்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

மனித உரிமை கமிஷனிடம் மனு:

இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷனிடம் பாமகவைச் சேர்ந்த வக்கீல் மனு கொடுத்துள்ளார்.

பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு இதுதொடர்பாக அளித்துள்ள மனுவில்,

கடந்த 19-ந் தேதி ஆயிரம் போலீசார் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக வக்கீல்களையும், ஐகோர்ட்டையும் சுமார் 5 மணி நேரம் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள்.

இந்த தாக்குதலில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் காயமடைந்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், வடசென்னை இணை கமிஷனர் ராமசுப்பிரமணியம், மத்திய சென்னை இணை கமிஷனர் சந்தீப் ராய் ரதோர், துணை கமிஷனர்கள் பிரேமானந்த சின்கா, சாரங்கன், பன்னீர்செல்வம், உதவி கமிஷனர்கள் கண்ணப்பன், காதர் மொய்தீன் ஆகியோர்தான் இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் ஆவர்.

ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், ஆயிரம் வக்கீல்கள், 100 கோர்ட்டு ஊழியர்கள், வழக்கு தொடர்ந்த 100 பேர் ஆகியோரை கொலை செய்ய கூட்டாக முயற்சி செய்துள்ளனர். ஐகோர்ட்டு உள்ளேயும், ஐகோர்ட்டுக்கு வெளியே என்.எஸ்.சி.போஸ் சாலை, தம்புசெட்டி சாலை, ஆர்மேனியன் சாலை, மூர் மார்க்கெட் உள்பட பல்வேறு சாலைகளுக்கு உள்ளே புகுந்தும் வக்கீல்களை துரத்தி, துரத்தி தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் நீதித்துறையின் வாகனங்கள், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களின் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இவ்வாறு மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்ட போலீசார் மீது மாநில மனித உரிமை கமிஷன் உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+