குலாம் நபி ஆசாத்துடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்து இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நீடித்தது.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத் கடந்த வாரம்தான் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். அவரிடம் தமிழகம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களின் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆசாத்தை, தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த வாரம்தான், திமுகவை விட்டு விட்டு காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என்று ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ஜெயலலிதாவின் அழைப்பை வீரப்ப மொய்லி நிராகரித்து விட்டார். முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவின் செயல்பாடுகள், காங்கிரஸையும், சோனியா காந்தியையும் ஜெயலலிதா எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார், அவமானப்படுத்தினார் என்பதை விவரித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஜெயலலிதாவின் அழைப்பில் காங்கிரஸார் ஏமாந்து விடக் கூடாது என கூறியிருந்தார்.
ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், அதிமுகவுக்கு அனுதாபிகளாக உள்ளதால், கடைசி நேரத்தில் அதிமுக பக்கம் காங்கிரஸ் போய் விடுமோ என்ற சந்தேகம் திமுக மத்தியில் உள்ளது.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறன் ஆசாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் உத்தரவுப்படியே தயாநிதி மாறன், ஆசாத்தை சந்தித்துப் பேசியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆசாத், தயாநிதி மாறன் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவலை காங்கிரஸ் வட்டாரம் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications