மங்களூரில் மீண்டும் சர்ச்சை - காதல் ஜோடிக்கு அடி உதை
மங்களூர்: மங்களூர் இரண்டு காதல் ஜோடிகளைப் பிடித்த ஒரு கும்பல், அவர்களில் ஒரு ஆணை அடித்து உதைத்தது. மற்றவர்களை போலீஸாரிடம் அந்தக் கும்பல் ஒப்படைத்தது.
மங்களூரில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அங்குள்ள பப்புக்குள் புகுந்து பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
பின்னர் கேரள எம்.எல்.ஏ ஒருவரின் மகள், தன்னுடன் படிக்கும் தோழருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவர்களை கடத்தி தாக்கினர்.
இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் மங்களூரில் நடந்துள்ளது.
மங்களூரில் உள்ள ஒரு ஜூஸ் மையத்தில் அமர்ந்திருந்த இரண்டு காதல் ஜோடிகளை ஒரு கும்பல் மடக்கியது. அப்போது அதிலிருந்த ஒரு ஆண் தப்பி ஓடினார். இன்னொரு ஆணை அக்கும்பல் அடித்து உதைத்தது. இதில் அவர் காயமடைந்தார்.
பின்னர் அனைவரையும் அக்கும்பல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது.
கும்பலால் தாக்கப்பட்ட அனைவரும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.