தமிழகத்தில் மீண்டும் ஷிப்ட் முறையில் மின்வெட்டு
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கடும் மின்வெட்டு நிலவியது. இதனால் தொழில்துறையும், உற்பத்தித் துறையும் கடும் பாதிப்பை சந்தித்தன. பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இதையடுத்து நிலைமையை சமாளிக்க ஷிப்ட் முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், கிராமப் புறங்களில் பல மணி நேரம் என மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இடையில் இந்த மின்வெட்டு தளர்த்தப்பட்டது. மின் உற்பத்தி திருப்திகரமாக இருப்பதால் மின்வெட்டை மின்வாரியம் தளர்த்தியது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்த கோடை காலத்தில் மின்வெட்டு அறவே இருக்காது. கூடுதல் மின்சாரம் தருவதாக மத்திய அரசும் கூறியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் சொல்லி ஓரிரு நாட்களிலேயே மீண்டும் மின்வெட்டு அமலாகியுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஷிப்ட் முறை மின்வெட்டு மீண்டும் அமலாகியுள்ளது. காலை முதல் மாலை வரை ஷிப்ட் முறையில் ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு மணி நேரம் மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது.
இப்போதே மின்வெட்டு அமலாகியிருப்பதால் வீராசாமி சொன்னது போல கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்காதா அல்லது ஷிப்ட் முறை மின்வெட்டு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
இப்படி மின்வெட்டு ஒரு பக்கம் இருந்தால், மறுபக்கம் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மழை சீசன் முடிந்து விட்டது. இடையில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. இதனால் வெயிலின் வெம்மை பெரிய அளவில் தெரியாமல் இருந்தது.
ஆனால் தற்போது பனி சுத்தமாக நின்று விட்டது. இதனால் காலை 6 மணிக்கு மேல் வெயில் வெளுக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது. பகல் நேரங்களில் இப்போதே அனல் காற்றும் வீசுகிறது. மின்விசிறிகளைப் போட்டாலும் கூட காற்றுக்குப் பதில் வெப்பமான காற்றுதான் வருவதால் அதையும் போட்டுப் பயன் இல்லை.
வெயில் வெளுத்துக் கட்ட ஆரம்பித்திருப்பதால் கிர்னி பழங்கள், தர்பூசனி, குளிர்பான விற்பனை சென்னை நகரில் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
குமரியில் கொளுத்தும் வெயில்..
கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை டிசம்பர் மாதத்துடன் மழை சீசன் முடிவடையும். பின் மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு குளிர்ந்த காற்றும், இரவு வேளையில் கடும் குளிரும் காணப்படும்.
இந்த ஆண்டு சிவராத்திரியுடன் குளிர் சீசன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வெயில் கொளுத்த துவங்கி உள்ளது.
பகல் நேரத்தில் ரோ்ட்டில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் புழுக்கமாக இருப்பதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்கிறது. பல்வேறு குளங்களில் தண்ணீர் வற்ற துவங்கியுள்ளது. விவசாய நிலங்களில் வறட்சி தென்பட துவங்கியுள்ளது.
தர்பூசணி அமோக விற்பனை...
குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் முன்பாகவே தென்பட்டதை தொடர்ந்து தர்பூசணி, குளிர்பான விற்பனை இப்போதே சூடுபிடிக்க துவங்கிவிட்டது. மார்த்தாண்டம் புகுதியில் இவை அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன. வியாபாரமும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் இதை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.