திமுக கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசு வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மாவட்ட கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராதாபுரம் பகுதியில் உள்ள விஜயாபகுதியில் மதுக்கடையை அகற்ற வேண்டும், அங்கு புதிதாக போடப்பட்ட சாலை பணி முறைகேட்டை கண்டித்தும, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழு நேர மின்சாரம் வழங்க கோரியும், சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசின் சுனாமி குடியிருப்புகளை உடனடியாக கட்ட கோரியும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்க தடையாக உள்ள அதிகாரிகளை கண்டித்தும் ராதாபு்ரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக கவுன்சிலர் சாண்டல் முத்துராஜ் தலைமை வகித்தார். இடித்தக்கரை திமுக கிளை செயலாளர் சிங், விஜயாபதி கிளை செயலாளர் மெகா ராஜ், நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.