கோபால்சாமி பரிந்துரை தள்ளுபடி:சாவ்லா நீக்கம் இல்லை- குடியரசுத் தலைவர்
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சமீபத்தில் பிரதிபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த பரிந்துரை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோபாலசாமியின் இந்த பரிந்துரையை பாஜக வரவேற்றது. அதேசமயம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் கடுமையாக கண்டித்தன.
மத்திய அரசு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு, கோபாலசாமியின் பரிந்துரையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, அதை நிராகரித்து விடலாம் என கடிதம் எழுதியது.
மத்திய அரசின் பரிந்துரை, அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கோபால்சாமியின் பரிந்துரையை தள்ளுபடி செய்து விட்டார்.
அடுத்த தேர்தல் கமிஷனர்...
இதைதொடர்ந்து நவீன் சாவ்லா தொடர்ந்து தேர்தல் ஆணையராகப் பணியாற்ற வழி ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் உருவாகவும் தடங்கல் நீங்கியுள்ளது.
வரும் 20ம் தேதி கோபால்சாமி கால் தசைநார் பிரச்சினைக்கான சிகிச்சைக்காக விடுமுறையில் செல்வதால் நவீன் சாவ்லா அப்போது சாவ்லா, தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
நாளை தேர்தல் தேதி...
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் நான்கு கட்டங்களிலாவது தேர்தல் நடக்கும். ஒரு வேளை நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றால் அது காங்கிரசுக்கு அதிகம் சாதகமாக இருக்கும்.
ஏனென்றால் வரும் 6ம் தேதி வரை காங்கிரஸ் தனது சாதனை விளக்க பிரச்சார விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஒரு வேளை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட்டால் அதன் பின்னர் காங்கிரசால் மக்கள் காசில் இந்த விளம்பரங்களை செய்ய முடியாது என்றார் அந்த மூத்த உறுப்பினர்.