கடலோரப் பாதுகாப்பு முழுமையாக கடற்படையிடம் ஒப்படைப்பு
கொச்சின்: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு கடலோரப் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் என்பதால் நாட்டின் கடலோரப் பாதுகாப்பு முழுமையாக கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய கடரோலப் பாதுகாப்புப் படையினரிடைடேய போதிய ஒத்துழைப்பு இல்லாததை அடுத்து அவர்கள் எளிதாக மும்பைக்குள் புக முடிந்தது.
இதையடுத்து மத்திய அரசு கடல் தொடர்பான அனைத்து பாதுகாப்பையும் இந்திய கடற்படை வசம் ஒப்படைத்துள்ளது.
மேலும், புதிதாக அமைக்கப்பட இருக்கும் கடலோர பாதுகாப்பு கமாண்டின் தலைவராக கடலோரப் பாதுகாப்புப் படைத் தலைவர் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை கமாண்டர்களே, கடலோரப் பாதுகாப்பு கமாண்டர்களாவும் செயல்படுவார்கள்.மேலும், 'சாகர் பிரஹரி பால்' என்ற 1000 வீரர்கள் கொண்ட புதிய பிரிவும் தொடங்கப்படுகிறது. இந்தப் பிரிவு வீரர்கள், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையின் மையங்களைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இதுதவிர நாட்டின் மேற்குப் பகுதிகளை காக்கும் வகையில், கடலோர பாதுகாப்புப் படையில் புதிதாக வட மேற்கு கமாண்ட் ஒன்றும் தொடங்கப்படுகிறது.
கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கு கூடுதலாக புதிய கப்பல்கள், விமானங்கள், ஹோவர்கிராப்டுகள், ஹெலிகாப்டர்கள், கப்பல் தளங்கள் மற்றும் படைவீரர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படவுள்ளது.
இந்தத் தகவல்களை கொச்சியில் நடந்த இந்தியாவிலேயே கட்டப்படவிருக்கும் நாட்டின் முதலாவது விமானம் தாங்கி கப்பலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.