மன்மோகன் முழு உடல்தகுதி பெற்றுவிட்டார்: டாக்டர்கள்
டெல்லி: இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல் தகுதியை பரிசோதனை செய்த டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக டாக்டர்கள் பிரதமர் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜனவரி 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பை பாஸ் சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் கடந்த மாதம் 1ம் தேதி வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டில் அவருக்கு அவருடைய பிரத்யேக டாக்டர் கே.எஸ்.ரெட்டி தலைமையிலான டாக்டர்கள் குழு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தார். சுமார் 15 நிமிடம் பரிசோதனை நடந்தது.
இதன் பின்னர் எய்ம்ஸ் டாக்டர் டி.கே.சர்மா கூறுகையில், பிரதமர் நல்ல உடல்நலனுடனும், உடல்தகுதியுடனும் இருக்கிறார் என்றார்.