ரூ. 5 லட்சம் கேட்டு மாணவனைக் கடத்திய 4 பேர் கைது
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மாணவனைக் கடத்தி வைத்துக் கொண்டு ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் சிவா (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த அவனை காரில் வந்த 4 பேர் கடத்தி சென்றுவிட்டனர்.
இதனால் பதறிப் போன ராஜா குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மகனைத் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் செல்போனில் ராஜாவிடம் பேசிய மர்ம நபர் ரூ. 5 லட்சத்துடன் திண்டிவனம் மேம்பாலம் அருகே வரவேண்டும். பணம் இல்லா விட்டால் வீட்டு பத்திரத்துடன் வர வேண்டும். போலீசுக்கு சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்.
இதையடுத்து ராஜா போலீஸில் புகார் கொடுத்தார். மாணவனை பத்திரமாக மீட்கத் திட்டமிட்ட போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பல்வேறு வாகனங்களி்ல பல திசைகளிலும் போலீஸார் புறப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ராஜாவும் தனது வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர் சொன்ன இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். அவருக்குப் பின்னால் மாறு வேடத்தில் போலீஸார் தொடர்ந்தனர்.
திண்டிவனம் சாரம் மெயின் ரோட்டில் போலீசார் சிறுவனைக் கடத்திச் சென்ற காரை கண்டு சுற்றி வளைத்தனர்.
பின்னர் காரில் இருந்த சென்னை புதுஓட்டேரியை சேர்ந்த சுரேஷ், ரவி, கிளாப்பாக்கம் குட்டி என்ற பாலமுருகன், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஏனாக் ஆகிய 4 பேரை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவர்களின் பிடியிலிருந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.