தமிழக தலைவர்கள் தள்ளாடுகின்றனர்: இயக்குனர் வி.சி. குகநாதன்
மதுரை: தமிழகத்தில் தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக் கொள்கிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர் வி.செ. குகநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
தமிழகத்தில் தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் யாரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லை என்று யாரும் சொன்னதில்லை. அப்படி சொன்னால் அந்த கட்சி நிச்சயமாகத் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணமுடியாது.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் வாய்ப்பு முதல் தடவையாக நழுவிப்போனது. இல்லையெனில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் காலகட்டத்திலேயே அது நிறைவேறியிருக்கும்.
மத்தியில் கூட்டணியில் இருக்கும் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் மனது வைத்தால் ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் என உலக தமிழினம் நம்புகிறது.
தற்போது ஈழத்தில் தமிழ் இனம் பூண்டோடு அழிக்கப்படுகிறது. உலகுக்கு இந்த உண்மை தெரியும். இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இனம் தமது உரிமைகளைப் பாராளுமன்றத்தில் பேசி பெற முடியாத நிலை உள்ளது.
ஆனால் பக்கத்து நாடான இந்தியா தீர்க்கமான முடிவை எடுக்காமல் உள்ளதாலும், போராளிகளையும் தமிழர்களையும் பிரித்துக்காட்டி குழப்பத்தை ஏற்படுத்துவது இவை எல்லாம் மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்க அஞ்சும் நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.