திமுகவுடன் தொகுதிப் பங்கீடு - நாளை வருகிறார் குலாம் நபி ஆசாத்
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் நாளை சென்னை வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்து விடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டாளியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் நாளை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்.
திங்கள்கிழமை தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிகிறார். பின்னர் அவர் மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அவரின் உடல் நிலை குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அவர் விவாதிப்பார்.
ஏற்கனவே குலாம்நபி ஆசாத், டெல்லியில் தமிழக எம்.பி.க்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து இருக்கிறார். தற்போது நடைபெறும் இந்த கூட்டத்திலும் கலந்து கொண்டு ஒத்த முடிவுகளை அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியிடம் தெரிவிப்பார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்து இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் கூட்டணி பற்றி முழு முடிவையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தான் அறிவிப்பார். தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்.
கம்யூனிஸ்டுகள் இப்போது எங்களை விட்டு பிரிந்து போய் இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு எங்களுடன் சேருவார்கள். இது தான் உண்மை. போக போக உங்களுக்கே தெரியும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில், ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். போர் வியூகம் தீர்வாக அமையாது. பேச்சுவார்த்தை தான் தீர்வாக அமையும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து இருக்கிறோம். இந்த பிரச்சினை சம்பந்தமாக அந்த நாட்டு அரசிடம் பிரதமரும், மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியும் வலியுறுத்தி இருக்கிறார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையால் பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது. கோர்ட்டு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி கமிஷன் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றார் தங்கபாலு.
கருணாநிதி, குலாம் நபி ஆசாத் சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இரு தரப்பும் பேசும் எனத் தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications