வைகோ மீது 4 பிரிவுகளில் வழக்கு - பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
தூத்துக்குடி:மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 195 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வைகோ உள்ளிட்டோரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று புதிய அனல் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கறுப்புகொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
கருப்புக் கொடிகளுடன், துடைப்பங்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.
அதில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 195 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குதல், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுதல், உருவப்படம் எரித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ, எம்எல்ஏக்கள் ஞானராஜ் மற்றும் வரதராஜன் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நள்ளிரவு வரை மண்டபத்திலே இருந்தனர்.
பின்பு அவர்கள் தூத்துக்குடியில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஹேமந்த் குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்டோர் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications