யுஎஸ்-1 லட்சம் பேர் இந்தியா திரும்புவர்
டெல்லி: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர்களது வருகையால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்றும் ஹார்வர்டு மற்றும் பெர்கர்லி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
இதே எண்ணிக்கையிலான சீனர்களும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பும் சூழல் உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இழப்பு, மற்ற நாடுகளுக்கு லாபம் என்ற நிலைதான் இப்போது நிலவுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் பணியிலிருக்கும் பணியாளர்கள் குறித்தும் ஒரு ஆய்வை மேற்கொண்டது ஹார்வர்டு மற்றும் பெர்கர்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு. இதற்கு விவேக் வாத்வா என்பவர் தலைமை வகித்தார்.
எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் இயல்பு கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒட்டி ரொம்ப நாளைக்கு மற்ற நாட்டு நிபுணர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், இப்போதைய நடப்பையொட்டி பார்த்தால் குறைந்தது 1 லட்சம் இந்தியர்கள், அமெரிக்காவை உதறிவிட்டு நாடு திரும்பும் நிலை உள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திங்கள்கிழமை இந்த முடிவுகளை வெளியிட்ட விவேக் வாத்வா, மேலும் தெரிவித்ததாவது:
இப்போது இங்கே பணியாற்றும் இந்தியர்கள், சீனர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் படித்து, நிபுணத்துவம் பெற்றவர்கள். இவர்கள் நாட்டை விட்டுப் போவதால் அமெரிக்காவுக்குதான் பெரும் நஷ்டம். அதே நேரம், சுதந்திரமான இந்தியப் பொருளாதாரத்தில் புதிய முயற்சிகளை செய்து வெற்றி காண்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஏற்கெனவே முன்னேற்றப் பாதையில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை நோக்கி வேகமாக முன்னேறி வரும் இந்தியாவுக்கு இது பெரிதும் பலன் தரும்.
இது சீனாவுக்கும் பொருந்தும். கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான சீனர்களும் நாடு திரும்பப் போகிறார்கள். அத்தகைய சூழலை அமெரிக்காவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
முன்பெல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் உயர் கல்வி கற்போரை அமெரிக்காதான் சொர்க்கம் மாதிரி ஈர்த்தது. ஆனால் இப்போது அமெரிக்காவை விட சுவாரஸ்யமும் கவர்ச்சியுமிக்க வேறு சொர்க்கங்களும் உருவாகிவிட்டன. இந்தியாவும் இதில் ஒன்று என்றால் மிகையல்ல என்கிறார் விவேக் வாத்வா.
மேலும், ஒபாமா அரசின் புதிய வேலைவாய்ப்புக் கொள்கைக்கு எதிரான நிலை இன்று அமெரிக்காவில் நிலவுவதாகவும் இந்த ஆய்வு முடிவு கூறுகிறதாம்.
நாட்டில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் இடத்தை அமெரிக்கர்களுக்குக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. அறிவுப் பற்றாக்குறைதான் ஏற்படும். எனவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும், என்றும் அந்த ஆய்வின்முடிவு தெரிவித்துள்ளது.