காங். கூட்டணியில் மமதா-பாஜக கூட்டணியில் அஜீத்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மமதா பானர்ஜி இணைந்துள்ளார். அதேபோல உ.பியில், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி உடன்பாடு கண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் காலம் தொடங்கி விட்டதால் ஆங்காங்கு தேர்தல் மேகம் வேகமாக திரண்டு கொண்டிருக்கிறதி. சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளைத் தேடியும், பெரிய கட்சிகள், பல்வேறு கட்சிகளை திரட்டுவதுமாக உள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிகழ்வாக, மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்திலிருந்து டாடாவின் நானோ திட்டத்தை விரட்டியடித்த மமதா பானர்ஜியை அந்த சூடு மறைவதற்குள்ளாகவே காங்கிரஸ் தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளது.
கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் பல காலமாக உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், டாடா விவகாரத்திற்குப் பின்னர் ஊரக வாக்காளர்களிடையே மமதாவுக்கு நல்ல செல்வாக்கு ஏற்படடுள்ளது. இதை மனதில் கொண்டு, அக்கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது காங்கிரஸ்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி தனிக் கட்சி கண்ட மமதா தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் காங்கிரஸுடன் அணி வகுக்கவுள்ளார்.
ஆரம்பத்தில் இந்தக் கூட்டணிக்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் தற்போது மமதாவுடன் கூட்டணி வைக்க பிரணாபும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.
மமதாவும், பிரணாபும் சந்தித்துப் பேசிய பின்னர் இக்கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்,உருப்படியாக இருவரும் பேசினோம். எங்களுக்கு தற்போது சில கட்டாயங்கள் உள்ளதால், பேச்சுவார்த்தை விவரங்களை முழுமையாக வெளியிட முடியாது. இருப்பினும் உடன்பாடு குறித்த விவரங்கள் விரைவில் முழுமையாக வெளியிடப்படும் என்றார்.
மமதா கூறுகையில், இடதுசாரிகளுக்கு எதிரான வாக்குகள் பிரியக் கூடாது என்பதால்தான் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டோம். மத்திய மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அதேபோல தெற்கு மேற்கு வங்கத்தில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இரண்டும் இணைந்தால் கம்யூனிஸ்டுகளுக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி.
இருவருக்கும் இடையே நடந்த பேச்சு பயனுள்ளதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியை விட்டு நாங்கள் துரத்தப் போவது உறுதி என்றார்.
பாஜக கூட்டணியில் அஜீத் சிங்
அதேபோல உ.பி மாநிலத்தில் ஓரளவு செல்வாக்குடன் உள்ள அஜீத் சிங்கை தன் பக்கம் இழுத்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
அஜீத் சிங்குடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை அத்வானி, ராஜ்நாத் சிங், அஜீத் சிங் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவும் உடன் இருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை.
கடந்து ஐந்து ஆண்டுகளாக நாடு அவதிப்பட்டதுதான் மிச்சம். அஜீத் சிங்கின் ஆதரவு வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
அஜீத் சிங் பேசுகையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் மாற்று வேண்டியே மாயாவதிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் மாயாவதிக்கு மாற்றாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.