குஜராத் கலவரம்-எஸ்.ஐ.டி அறிக்கை தாக்கல்
டெல்லி: குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த வன்முறைக்குப் பின்னர் முஸ்லீ்ம்களுக்கு எதிராக மூண்ட கலவரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
கோத்ராவில் ராம பக்தர்கள் சென்ற ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்பட்டது. பஜ்ரங் தளம், வி.எச்.பி. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கொலை வெறியாட்டம் நடத்தின.
இதுகுறித்து குஜராத் அரசு மழுப்பலான விசாரணை நடத்தியது. அப்படியே வழக்கை மூடி விடவும் எத்தனித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுப் படையை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இந்த புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்தி பலரைக் கைது செய்தது. இந்த நிலையில் தனது விசாரணை அறிக்கையையும், ரகசிய அறிக்கை ஒன்றையும் இன்று நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்தது.
அறிக்கைகளைப் பெற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை அறிக்கையை மட்டும் குஜராத் அரசுக்குத் தரப்படும் என்றும், ரகசிய அறிக்கையை யாருக்கும் வழங்க மாட்டோம் எனவும் அறிவித்தனர்.
உச்சநீதிமன்றம் நியமித்த இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து இயங்கலாம் என்றும் அது விரும்பினால் பிற வழக்குகளை விசாரிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழுவில், முன்னாள் உ.பி. டிஜிபி சத்பதி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் கீதா ஜோரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.