கவுன்சிலர்களின் கணவர்கள் வாதம்-அதிகாரி சஸ்பெண்ட்
கொடைக்கானல்: கொடைக்கானிலில் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில், பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்மார்களை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொடைக்கானல் பஞ்சாயத்து யூனியனில் திமுகவைச் சேர்ந்த அப்துல் ரசாக் தலைவராகவும், கிருஷ்ணன் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இதில், கிருஷ்ணவேணி (திமுக), ராமுத்தாய் (திமுக), அம்சவள்ளி (அதிமுக), சரஸ்வதி (காங்கிரஸ்) ஆகிய பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
யூனியன் கவுன்சில் கூட்டதில் தேர்வு செய்யப்பட்ட பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்களே பங்கு கொள்வது வழக்ககாக இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், ராமுத்தாய்க்கு பதில் அவரது கணவர் சங்கிலியும், கிருஷ்ணவேணிக்கு பதில் அவரது கணவர் ஆறுமுகமும், சரஸ்வதிக்கு பதில் அவரது கணவர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு நில்லாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தங்களது மனைவியின் கையழுத்தையும் போட்டு ஜனநாயகத்தை சரமாரியாக தூக்கிப் போட்டு மிதித்துள்ளனர்.
பெண் கவுன்சிலர்களின் கணவர்மார்கள் கலந்து கொண்டு வாதிட்ட 'அழகு', கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கிரிலோஸ் குமார் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்களை அனுதித்த வட்டார அலுவலர் சலிம் சேட்டை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கொட்டைக்கானல் பஞ்சாயத்து யூனியனில் வரவேற்பு பலகை அமைப்பதில் பல லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து அது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications