கூட்டணி, தொகுதி பங்கீடு- திமுக, அதிமுக குழுக்கள் அறிவிப்பு
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு ஒன்றை திமுக மற்றும் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு தமிழகக் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதல் கட்டமாக தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச ஒவ்வொரு கட்சியும் குழுக்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
அதிமுக சார்பில் குழு ஒன்றை ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
விரைவில் நடைபெற உள்ள 2009 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொகுதிப் பங்கீட்டுக்குழு அமைக்கப்படுகிறது என்பதையும் அதில் கீழ்க்கண்டவர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் குழு
இதேபோல திமுகவும் ஒரு குழுவை அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அந்தக் குழுவில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.