ஷாப்பர்ஸ் ஸ்டாப்: மேலும் 4 கிளைகள் மூடல்!
மும்பை: சில்லறை வர்த்தகத்துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனம் எனப் புகழப்படும் ரஹேஜா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவு, மோசமான வர்த்தகம் காரணமாக தடுமாறத் துவங்கியுள்ளது.
இதன் துணை நிறுவனமான க்ராஸ்வோர்ட்ஸ் புக்ஸ்டோர்ஸ் லிமிடெட் நடத்தி வரும் ஷாப்பர்ஸ் ஸ்டாப்பின் 4 முக்கிய கிளைகளை மூடியுள்ளனர்.
ஒரு முறை கடைக்குள் நுழைந்துவிட்டால் சொத்தையே இழந்துவிடும் அளவுக்கு, ஒரே கூரையின் கீழ் அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில்லறை விற்பனை மையம் ஷாப்பர்ஸ் ஸ்டாப். உலகின் முன்னணி நுகர்பொருள் உற்பத்தியாளர்கள், இந்த மையங்களில் நேரடியாகவே தங்கள் பொருட்களை விற்றனர். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தியா முழுவதும் மொத்தம் 52 கிளைகள் உள்ளன இந்த நிறுவனத்துக்கு. உலகின் சில நாடுகளிலும் கூட கிளை பரப்பியுள்ளது ஷாப்பர்ஸ் ஸ்டாப்.
நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதாலும், ஐடி துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாலும், இந்தக் கடைகளில் இப்போது திட்டமிட்ட அளவுக்கு விற்பனையும் வருவாயும் இல்லை. எனவே முதல்கட்டமாக 4 முக்கிய கிளைகளை மூடியுள்ளது ஷாப்பர்ஸ் ஸ்டாப்.
சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள இதன் பிரமாண்ட கிளையும் இதில் அடங்கும். புதுடெல்லியில் உள்ள கிளையையும் மூடியுள்ளனர்.
இதேபோல விமான நிலையங்களில் இயக்கப்படும் ஸ்டாப் அண்ட் கோ கடைகளும் ஷாப்பர்ஸ் ஸ்டாப்புக்கு சொந்தமானதே. இவற்றிலும் இரு கிளைகளை மூடியுள்ளது இந்த நிறுவனம்.மும்பை டெர்மினல் பி-1-ல் இயங்கும் ஸ்டாப் அண்ட் கோ ஷோரூமும் மூடப்பட்டது.
இவற்றால் எந்த லாபமுமில்லை என்பது உறுதியாகிவிட்டதாலேயே மூடப்பட்டன என ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிர்வாகம் அறிவித்துள்ளது.