கருப்பு பேட்ஜுடன் இந்திய வீரர்கள்
டெல்லி: லாகூர் தீவிரவாதத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. இலங்கை அணியினருக்கு போதிய பாதுகாப்பு தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இலங்கை அணியினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், இது அதிர்ச்சியாக உள்ளது. இலங்கை வீரர்களின் பாதுகாப்பு சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டை நாங்கள் கண்டிக்கிறோம். சமரவீரா உள்ளிட்ட காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றார்.
இந்தியாவில் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கேள்விக்கு, அதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டி வரட்டும். உரிய பாதுகாப்பினை அரசு அளிக்கும் என்றார் சிதம்பரம்.
கருப்பு பேட்ஜுடன் இந்திய வீரர்கள்:
லாகூரில் நடந்த தீவிரவாத்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்தபடி விளையாடினர்.