கடந்த தேர்தலி்ல் கோஷம் தப்பாப் போச்சு..அத்வானி
டெல்லியில் பாஜக வர்த்தகப் பிரிவு மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு அத்வானி பேசுகையில்,
மத்தியில் பாஜக ஆட்சியின் போது வாஜ்பாய் தலைமையில் 6 ஆண்டுகள் சிறப்பான அரசாங்கத்தை வழங்கினார். இதனால் கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மீண்டும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற திடமான நம்பிக்கையில் இருந்தோம்.
'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்தோம். இதை வைத்து பாரதீய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பினோம். வெளிநாடுகளைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட பாஜக தான் வெற்றி பெறும் என்று கணித்தனர்.
ஆனால் ஆட்சியை இழந்து விட்டோம். நாம்தான் வெற்றி
பெறுவோம் என்ற அதிகமான நம்பிக்கையாலும் "இந்தியா
ஒளிர்கிறது'' போன்ற கோஷங்களாலும் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம்.
இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை வைத்து எதிர்க்கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து உங்கள் வீடு ஒளிர்கிறதா என கேள்வி கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இதனால் நமது கோஷம் எடுபடவில்லை.
நம் நாட்டில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்ததும் தவறான கொள்கை. இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியின் 5 ஆண்டு ஆட்சியில் பல இந்தியர்கள் மில்லியனர்களாக மாறி விட்டார்கள். ஆனால் அதே சமயம் இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 3.5 கோடியில் இருந்து 5.5 கோடியாக அதிகரித்து விட்டது என்றார் அத்வானி.