தரையில் படுத்து உயிர் தப்பினோம்: ஜெயவர்த்தனே
லாகூர்: தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததும், பஸ்சிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்து உயிர் தப்பினோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
லாகூர் பயங்கரம் குறித்து திகில் மாறாத உணர்வுடன் ஜெயவர்த்தனே விவரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நாங்கள் கடாபி ஸ்டேடியத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.
எங்களது பஸ்சை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். முதலில் பஸ்சின் சக்கரங்களை குறி வைத்து சுட்டனர். இதனால் பஸ் போக முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பஸ்ஸை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த அனைவரும் வேகமாக வெளியே குதித்து தரையில் படுத்துக் கொண்டோம்.
இந்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள், உதவிப் பயிற்சியாளர் பால் பேர்பிரேஸ் ஆகியோர் காயமடைந்தனர். அனைவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டது. அவையும் கூட கீழே விழுந்ததாலும், குண்டுச் சிதறல்களாலும் ஏற்பட்டவை என்றார் ஜெயவர்த்தனே.
தீவிரவாதம்-பீதியால் பாதிக்கப்பட்ட தொடர்கள்:
உலக அளவில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளன, பல ரத்தாகியுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை...
1996 - இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்த நிலையில் கொழும்பில் உள்ள சென்டிரல் வங்கியை விடுதலைப் புலிகள் தாக்கியதைத் தொடர்ந்து, இலங்கையில் விளையாட ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மறுத்து விட்டன.
2002 - நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் அங்கு குண்டு வெடித்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரை நியூசிலாந்து ரத்து செய்தது.
2003 - கென்யாவில் உலக கோப்பைப் போட்டிகள் நடந்தபோது அங்கு வந்து விளையாட இங்கிலாந்து அணி மறுத்து விட்டது.
2006 - இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டது.
2008 - மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. பின்னர் மீண்டும் வந்து விளையாடியது.