கூட்டணி: என்ன செய்யப் போகிறது பாமக?

கடந்த லோக்சபா தேர்தலி்ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. செங்கல்பட்டு, அரக்கோணம், தர்மபுரி, திண்டிவனம், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆறிலும் வென்றது.
ஆனால் தற்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே உரசல் முற்றியது. இதையடுத்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.
இருப்பினும் தற்போது பேட்ச் அப் வேலைகள் செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் திமுகவுடன் கூட்டணி சேருவோமா என்பது குறித்து இதுவரை பாமக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் திமுக கூட்டணியிலேயே பாமக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான முயற்சிகளி்ல் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு பாமக போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பாமகவுடன் அதிமுக தரப்பு மறைமுகமாக பேசவும் ஆரம்பி்த்துள்ளது.
வருகிற 8 அல்லது 9ம் தேதி பாமக பொதுக்குழு தைலாபுரம் தோட்டத்தில் கூடுகிறது. அப்போது கூட்டணி குறித்து இறுதி முடிவை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
அதற்கு முன்பாக 7ம் தேதி சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கட்சியின் நிலை குறித்து சூசகமாக அறிவிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications