டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு தங்க மயில் விருது!
டெல்லி: சர்வதேச அளவில் நான்காவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு, சிறந்த நிர்வாகத்துக்கான புகழ்பெற்ற தங்க மயில் விருது வழங்கப்பட்டது.
சமுதாய பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படையான சிறந்த நிர்வாகத்துக்கான தங்க மயில் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ஸ்வீடன் பிரதமர் ஓலா உல்ஸ்டன், முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பகவதி ஆகியோரை துணை தலைவர்களாக கொண்ட 'கோல்டன் பீகாக்' குழுதான் இந்த விருதுக்கான பட்டியலைத் தயாரித்தது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சமூகரப் பொறுப்புணர்வு, நிர்வாகத்தின் தெளிவு போன்றவை காரணமாக இந்த விருதினை அந்நிறுவனத்துக்கு வழங்குவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாமவுரா நகரில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. டாடா ஸ்டீல் சார்பாக போர்ச்சுகலில் இருக்கும் கோரஸ் இன்டர்நேஷனல் நிர்வாகி கிலாடியா ஸ்டீவ்ஸ் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
இதே விருதினை கடந்த ஆண்டு சத்யம் நிறுவனம் வென்றது. ஆனால் ராமலிங்க ராஜுவின் மோசடிக்குப் பின் சத்யம் நிறுவனத்திடமிருந்து இவ்விருது பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.