பாஜக 14 இடங்களில் போட்டியிட முடிவு - தென் சென்னையில் இல.கணேசன்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 14 தொகுதிகள் வரை பாஜக தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் பாஜக கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம் பெறவில்லை. மார்ச் 12ம் தேதி வரை காத்திருப்போம், அதற்குள் யாராவது கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூட்டணியே ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. அப்படி போட்டியிட்டால் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என உத்தேசமாக தீர்மானித்து வைத்துள்ளனர்.
9 முதல் 14 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்சென்னையில் இல.கணேசன்
மாநில தலைவர் இல.கணேசனும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். அவர் அனேகமாக தென் சென்னையில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளரான தமிழிசை செளந்தரராஜன் வட சென்னையில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
கன்னியாகுமரி (முன்பு நாகர்கோவில்) தொகுதியில், பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார்.
கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, ஸ்ரீபெரும்புதூரில் குமாரவேலு ஆகியோர் போட்டியிடலாம்.
லலிதா குமாரமங்கலம்
திருச்சி தொகுதியில் லலிதா குமாரமங்கலம் போட்டியிடக் கூடும். அதேசமயம், சுகுமாரன் நம்பியாரும் இத்தொகுதிக்கு முயல்வதாக தெரிகிறது. இவர் முன்பு வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
இப்படி மொத்தம் 14 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
கூட்டணிக்கு பாஜக விதித்துள்ள கெடுவான 12ம் தேதியன்று இந்த பட்டியலை பாஜக தலைமை முறைப்படி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.