ஓட்டளிக்க விரும்பமி்ல்லையா!..பதிவு செய்யலாம்!!
மதுரை: வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்கள் வாக்கு சாவடிக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கில் தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காமல் இருக்க உரிமை உண்டு.
இதற்கு தேர்தல் விதிமுறைகளில் வழி உண்டு. தேர்தல் சட்டத்தின் 49-ஓ பிரிவின் கீழ் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குச் சென்று, நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அதற்குரிய விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்று நிரப்பித் தர வேண்டும்.
இருப்பினும் இப்படி ஒரு வாக்காளர் செய்வதற்கு உரிமை உண்டு என்பது தேர்தல் அதிகாரிகளுக்கே சரிவர தெரியவில்லை. எனவே இதுகுறித்து இந்த முறை அனைத்து வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரிகளுக்கும் விரிவான முறையில் விளக்கப்படவுள்ளது.
வருங்காலத்தில் இந்த முறையை ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே வாக்காளர்கள் தெரிவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொரடப்பட்டுள்ளது. அது தற்போது நிலுவையில் உள்ளது.
தேர்தலில் 35 சதவீத வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து விட கூடிய நிலை உள்ளது. இந்த நிலை மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருக்காது.
புதிதாக தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் ஒரு முறை பதிவு செய்து விட்டு, அந்த கட்சி செயல்படாமல் இருந்தாலும் தேர்தல் ஆணைய பதிவில் தான் இருக்கும். அதனை ரத்து செய்வதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவை அரசே ஏற்பதில் சிக்கல்கள் உள்ளது என்றார் நரேஷ் குப்தா.