ஈரோடு யாருக்கு?: சுப்புலட்சுமி-இளங்கோவன் கடும் போட்டி
ஈரோடு: ஈரோடு தொகுதியில் போட்டியிட திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் இளங்கோவன் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகள் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியிலும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கோபி நாடாளுமன்றத் தொகுதியிலும் இருந்தன.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருச்செங்கோடு மற்றும் கோபி நாடராளுமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன. புதிதாக ஈரோடு, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாகியுள்ளன.
கடந்த தேர்தலில் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அதே போல கடந்த தேர்தலில் கோபி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இப்போது இந்த இருவரின் திருச்செங்கோடு மற்றும் கோபி தொகுதிகளே இல்லை. மாறாக அவை ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளாக மாறிவிட்டன.
சுப்புலட்சுமிக்கும் இளங்கோவனுக்கும் ஆதரவுள்ள பகுதிகள் ஈரோடு தொகுதிக்குள் வந்துவிட்டன. இதனால் ஈரோடு தொகுதியில் போட்டியிட இருவருமே தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஈரோடு தொகுதியை நாம் கேட்டுக் பெற வேண்டும் என்று இளங்கோவனும், அதை விட்டுத் தந்துவிடக் கூடாது என்று சுப்புலட்சுமியும் தங்களது கட்சித் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஈரோடு தொகுதியை திமுக தன் வசமே வைத்துக் கொண்டாலும் சுப்புலட்சுமிக்கு அவ்வளவு எளிதாக மீண்டும் சீட் கிடைத்துவிடாது என்பதே உண்மை.
இங்கு போட்யிடிட திமுக 'ஹெவி வெயிட்களான' முன்னாள் எம்பிக்கள் கே.பி. ராமலிங்கம், கந்தசாமி ஆகியோரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.