இலவச கலர் டிவி-கருணாநிதி வழியில் சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்: தமிழக முதல்வர் கருணாநிதி வழியை பின்பற்ற துவங்கியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. வரும் தேர்தலில் கேபிள் இணைப்புடன் கூடிய இலவச கலர் டிவி, குடும்ப உதவி தொகையாக மாதம் ரூ. 2000 என இலவசங்களை அள்ளி தருவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் மற்ற மாநிலங்களை அதிக பரபரப்புடன் காணப்படுகிறது. அங்கு வரும் தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்ய துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு இப்போதே மக்களிடம் இலவச வாக்குறுதிகளை அள்ளிவீச ஆரம்பித்துவிட்டார். அவர் கூறுகையில்,
ஆந்திராவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவச கலர் டிவியும், கேபிள் கனெக்சனும் வழங்கத் தயாராக இருக்கிறோம். கிராம மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு டிவி தான். அதனால் அவர்களுக்கு கலர் டிவி வழங்க முன்வந்துள்ளோம். அது மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சிக்கும் டிவி அவசியம்.
மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பத்தினருக்கு மாதம் ரூ. 2,000 உதவி தொகை வழங்கப்படும். அதைவிட சற்று அதிக வசதி படைத்த குடும்பத்துக்கு ரூ. 1,500ம், அவர்களை விட நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும்.
தமிழகத்தில் இந்தத் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. எனவே ஆந்திராவிலும் இது சாத்தியமாகும்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் செலவாகும். இதை சமாளிக்க தேவையான திட்டம் எங்களிடம் இருக்கிறது.
இதுதொடர்பாக எனக்கு யோசனைகள், ஆலோசனைகள் சொல்ல விரும்புவோர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றார் சந்திரபாபு நாயுடு.
இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் நிதியமைச்சருமான ரோசய்யா கூறுகையில், இதற்கான பணத்துக்கு நாயுடு என்ன செய்யப் போகிறார்? எங்கிருந்து பணம் வரும்?. இது போன்ற இலவசங்கள் மிக அபாயகரமானவை என்று முன்பு பேசியவர் தான் இந்த நாயுடு என்றார்.
வாக்குறுதிகள் அளிப்பதில் ஆஸ்கர் விருது ஏற்படுத்தினால் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அது கிடைக்கும்.