தப்ப முயன்ற கைதிகள்-வேனுக்குள் சுட்ட போலீஸ்
விருதுநகர்: மதுரை மத்திய சிறையிலிருந்து சிவகாசி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் திடீரென தப்ப முயன்றனர். இதையடுத்து போலீஸார் வேனுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 11 கைதிகள் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையிலிருந்து கைதிகள் கணேசன் (42), எலும்பன் என்கிற கருப்பசாமி (24), மாரிக்காளை (26), தங்கப் பாண்டி (26), காளிதாஸ்(28), முருகன் (29), சடையாண்டி (27), பொன்ராஜ் (25), ரமேஷ் குமார் (23), விஜயன் (29), கருத்தப்பாண்டி (26) ஆகிய 11 பேரை சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஒரு வேனில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
சப் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் 6 போலீஸார் வேனில் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மதுரைக்கு வேனில் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சில கைதிகள் போலீசாரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே போலீசார் அவர்களிடம் விருதுநகர் வந்ததும் வாங்கி தருகிறோம் என்று கூறினர். அப்போது கைதி ரமேஷ்குமார் வேனுக்குள் சிகரெட் பற்ற வைத்தார். இதனை போலீசார் கண்டித்தனர். இதனால் போலீசாருக்கும், கைதிகளுக்கும் வேனுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேன் விருதுநகர்- மதுரை பை-பாஸ் சாலையில் உள்ள வடமலைக்குறிச்சி அருகே வந்தபோது மீண்டும் கைதிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கைதிகள் எழுந்து கூச்சல் போட்டனர். கைதிகளை அமர வைக்க போலீசார் போராடினர்.
இந்த நிலையில் கைதி ரமேஷ் குமார் தப்பிக்க முயன்றார். நிலைமை விபரீமாவதை உணர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மாரி தனது துப்பாக்கியால் வேனின் கூரை மீது சுட்டார். இதையடுத்து கூரை பிய்த்துக் கொண்டு குண்டு வெளியே பாய்ந்தது.
இதைப் பார்த்து பயந்து போன கைதிகள், கப் சிப் என்று அமர்ந்து விட்டனர்.
பின்னர் விருதுநகர் வந்ததும் மேற்கு காவல் நிலையத்திற்கு வேன் திருப்பப்பட்டது. அங்கு போலீஸார் புகார் பதிவு செய்தனர். அதில், 11 கைதிகளும் தங்களைத் தாக்கி தப்ப முயன்றதாக கூறினர். இதையடுத்து 11 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications