இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் அதிகமான படகுகளில் கடலுக்கு சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் கச்சத்தீவு பகுதியில் அதிக மீன்கள் கிடைக்கும் என்பதால் அங்கு வலைவிரித்தனர். இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சேதுராமன், முனியசாமி படகு உட்பட 10 -க்கும் மேற்பட்ட படகில் இருந்த மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து மீனவ சங்கத் தலைவர் போஸ் கூறுகையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க உடனே முன் வர வேண்டும் என்றார்.