தொகுதிப் பங்கீடு - இந்திய கம்யூனிஸ்டுடன் அதிமுக பேச்சு
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன், அதிமுக குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து தோழமைக் கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கி வேகமாக நடத்த ஆரம்பித்துள்ளது.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் குழுவினருடன் அதிமுக குழு பேச்சு நடத்தியது.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், தா.பாண்டியன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அதிமுக குழுவுக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த தா.பாண்டியன் கூறுகையில், எந்தெந்த தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. தொடர்ந்து பேசுவோம் என்றார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.