ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை நிராகரிப்பு: போராட்டம் தொடரும் - வக்கீல்கள்
சென்னை உயர்நீதிமன்ற கலவரம் குறித்து விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் வக்கீல்களே. அதேபோல போலீஸாரும் எல்லை மீறி நடந்து கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை பாரபட்சமாக இருப்பதாக கூறி அதை வக்கீல்கள் நிராகரித்துள்ளனர்.
நேற்று உயர்நீதிமன்றத்திற்கு முன்பு நடந்த வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு பேசுகையில்,
ஐகோர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை முறையாக இல்லை. அதை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
போலீசார் தங்களை தாக்கினார்கள் என்று காயம் பட்ட வக்கீல்கள் தெரிவித்தனர். இதைப் பற்றி அதிலும் குறிப்பிடப்படவில்லை. வக்கீல்களை போலீசார் அடித்தது சரிதான் என்பது போல அறிக்கையில் உள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் நடக்க வக்கீல்கள்தான் காரணம் என்பது போன்று சொல்லப்பட்டுள்ளது. வக்கீல்களை அங்குள்ள வக்கீல்கள் கட்டுப்படுத்த தவறியுள்ளது போன்று அதில் கூறியுள்ளார்.
அதற்கு நாம் கூட்டம் போட்டு ஏமாளிகளாகவும் -கோமாளிகளாகவும் கத்திக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
போலீசை எந்த வகையிலும் எதிர் கொள்வது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்கு ஏற்பட்ட காயம் நடந்ததாகவே இருக்கட்டும். டெல்லி சென்றுள்ள நம் தலைவர்கள் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் வக்கீ்ல்கள் சங்கப் பிரதிநிதிகள் கூடி அவசர ஆலோசனை மேற்கொண்டனர். இதில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்துடன் மோதாத வகையில் போராட்டத்தை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு வக்கீல்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள் பெரும்பாலானோர் கமிஷன் அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தினர்.
இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நிராகரிப்பதாகவும், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்று வக்கீல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வக்கீல்கள் வேலைநிறுத்தம் தொடரவுள்ளது.