மதிமுகவிலிருந்து விலக மு.கண்ணப்பன் முடிவு?
பொள்ளாச்சி: மதிமுக அவைத் தலைவர் மு.கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் கண்ணப்பன். வைகோ, திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்தார்.
கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். எல்.கணேசன் கட்சியிலிருந்து வெளியேறியதும், அவர் வகித்து வந்த அவைத் தலைவர் பொறுப்பு, கண்ணப்பனிடம் வந்தது.
சட்டசபை மதிமுக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கண்ணப்பன். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
இந்த நிலையில், மதிமுகவிலிருந்து கண்ணப்பன் விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் கண்ணப்பன். ஆனால் தான் போவது குறித்து அவர் வைகோவிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார்.
இதன் காரணமாக கண்ணப்பனை அவர் ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கண்ணப்பன் சமீப காலமாக கட்சி விவகாரங்களில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
மேலும், தனது ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கண்ணப்பன் கருத்து தெரிவித்த மறுத்து விட்டார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளனர். அந்த சமயத்தில் கண்ணப்பனும் அவர்களுடன் இணைந்து திமுகவில் சேரலாம் எனவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications