ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தயார் - திருநாவுக்கரசர்
நாகர்கோவில்: கட்சி மேலிடம் அனுமதித்தால் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட தயாராகவே இருக்கிறேன் என்று பாஜக தேசிய செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த திருநாவுக்கரசர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, தீவிரவாதம், பணவீக்கம், வேலை இல்லா திண்டாட்டம், தொழில் மற்றும் உற்பத்தி குறைவு போன்ற சீரற்ற நிலைதான் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
மத்திய அரசின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மாநில கட்சிகள் கூட மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் பல மாநிலங்களில் பா.ஜ. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சில இடங்களில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை பா.ஜ. கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ. மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
ரஜினியை வற்புறுத்த முடியாது..
இந்தத் தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவரை யாரும் வற்புறுத்த முடியாது. ஆன்மிகம் மற்றும் தேசிய அரசியலில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதை பா.ஜ. வரவேற்கிறது. மக்களவை தேர்தலில் கட்சி அனுமதித்தால் ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications