கூடங்குளம்: 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கே வழங்கப்படும்
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையம் வரும் டிசம்பரில் மின் உற்பத்தியை துவக்கும் என்று இந்திய அணுமின் உற்பத்தி கழக தலைவர் எஸ்கே ஜெயின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூடங்குளத்தில் அளித்த பேட்டி:
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் உள்கட்டமைப்பு பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே துவக்கப்பட்டு விட்டன. இத்திட்டத்துக்கு பேச்சிபாறை அணையிலிருக்கும் தண்ணீரை பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தோம்.
தற்போது அதற்கு பதிலாக கடல் நீரையே குடிநீராக்கி பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக கேசான் என்ற 4 காங்கீரிட் தண்ணீர் தொட்டிகள் கடலில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணு உலை அழுத்த கலன் மற்றும் பைப் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அணுமின் நிலையத்தில் இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கும். வரும் டிசம்பர் மாதம் மின் உற்பத்தி ஆரம்பமாகும். வரும் 2010 ஜூனில் 2வது அணுஉலை செயல்படும்.
முதல் அணு உலையில் தயாரிக்கப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் ஏறக்குறைய 50 சதவீதம் வரை தமிழகத்திற்கும், மீதமுள்ள மின்சாரம் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பங்கிடப்படும். இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு மட்டும் சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றார்.