சங்கரன்கோவில்; நள்ளிரவில் 2 பேர் வெட்டிகொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இருவர் நேற்று நள்ளிரவில் வெட்டிகொலை செய்யப்பட்டனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ளது செந்தட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள முப்பிடாரியம்மன் கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஒரு தரப்பை சேர்ந்த குருவம்மாள் என்பவரும் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த கருப்பாயி அம்மாள் என்பவரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன், சுரேஷ் மூன்று பேரும் பைக்கில் சங்கரன்கோவிலில் இருந்து செந்தட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஊருக்கு ஓதுக்குபுறமான பகுதியில் மறைந்திருந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மூன்று பேரையும் சராமரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் பரமசிவனும், ஈஸ்வரனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். ஈஸ்வரன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அரிவாள் வெட்டில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எஸ்பி ஆஸ்ரா கர்க், டிஎஸ்பிக்கள் பாலகிருஷ்ணன், மயில்வாகணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications