சுடுகாட்டு பாதை தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் -கிராமத்தினர்
தூத்துக்குடி: சுடுகாட்டுக்கு பொது பாதை அமைத்து தராவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே குமரரெட்டியாபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த பாப்பையா ரெட்டியார் என்பவர் சுமார் 2 ஏககர் நிலத்தை சுடுகாட்டிற்காக பயன்படுத்தி கொள்ள கிராம மக்களுக்கு கொடுத்தார். அதை கிராம மக்கள் சுடுகாடாக பயன்படுத்தினர்.
இந்நிலையில் சுடுகாட்டை சுற்றியுள்ள நிலங்களை அவரது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் விற்பனை செய்துவிட்டனர். அங்கிருந்த பாதைகள் மறைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இறந்துபோனவர்களின் உடல்களை அந்த வழியாக கொண்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தகராறு செய்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு சுமார் 15 மீட்டர் அகலமும், 300 மீட்டர் நீளமும் கொண்ட பொதுப்பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் தலைவர் கூறுகையில், இந்த கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலை எங்களை பிரித்து விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு அதிகாரிகளும், வருவாய் துறை அலுவலர்களும் இந்த இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து ஊர் பகுதியில் இருந்து சுடுகாடு வரை செல்ல பொது பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி அமைக்காவிட்டால் மார்ச் 10ம் தேதி மக்களை திரட்டி ஓட்டபிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம் என்றார்.