விமான எரிபொருள் சர்சார்ஜ் 50% குறைப்பு!
இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள், விமான எரிபொருள் சர்சாஜை பாதியாகக் குறைத்துள்ளன.
இதுவரை குறைந்தது ஒரு மணிநேர பயணத்துக்கு ரூ. 2700 மற்றும் ரூ.1950 வசூலித்த விமான சேவை நிறுவனங்கள் இனி அதில் பாதி கட்டணத்தை மட்டுமே வசூலிப்பார்கள். ஆனால் விமானக் கட்டணத்தில் எந்த மாறுதலும் இல்லை.
இதுவரை ரூ.99 மட்டுமே விமானக் கட்டணம் என்றும் மீதியை எரிபொருள் உப வரியாகவும் வசூலித்து வந்தனர். உதாரணம்: குறிப்பிட்ட ஒரு மார்க்கத்தில், விமான எரிபொருள் சர்சார்ஜ் ரூ.2700 எனில், விமானக் கட்டணம் ரூ.99 மட்டுமே வசூலிக்கப்பட்டது.
ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் இந்த விமானக் கட்டணத்தை முழு அளவுக்கு உயர்த்தி விட்டனர். ரூ.99 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை பயண நேரத்துக்கேற்ப உயர்த்தப்பட்டது. இப்போது சர்சார்ஜை குறைத்துள்ளனர்.
உண்மையில் பயணிகளுக்கு எப்போது முழு பலன் கிடைக்கும்?
எரிபொருள் சர்சார்ஜ் மற்றும் விமானக் கட்டணம் இரண்டையுமே ஒரே நேரத்தில் குறைக்கும்போதுதான்.
அதுவும், விமான எரிபொருள் மீதான வரிகள் 5வது முறையாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த பலன் இப்போதும் முழுமையாக விமான நிறுவனங்களுக்கே போய் சேருகின்றன. இதை நாம் சொல்லவில்லை, பெட்ரோலியத்துறை அமைச்சகமே கூறியுள்ளது.
இந்தப் பலன் முழுமையாக மக்களைப் போய்ச் சேர விமான மற்றும் எரிபொருள் கட்டணம் இரண்டையுமே ஒரு சேரக் குறைத்தாக வேண்டும். ஆனால் முன்பு மிக மிகக் குறைவாக இருந்த விமானக் கட்டணத்தை உயர்த்திவிட்டு, எரிபொருள் கட்டணத்தைக் குறைத்திருப்பதில், பயணிகளுக்கு கிடைக்கும் பலன் என்னவென்பது இனிமேல்தான் தெரியும்.