சென்னையில் நாஞ்சில் சம்பத் கைது
சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியது தொடர்பாக திருப்பூரில் தொடரப்பட்ட வழக்கில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில், திருப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் மார்ச் 1ம் தேதி நாதியற்றவனா ஈழத்தமிழன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் பேசுகையில், இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால் சேலை கட்டி வந்த முசோலினி தான் சோனியா. தன்னை பிடிக்காத, தனக்கு பிடிக்காத மாமியார் இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்துள்ளார்.
மன்மோகன்சிங் வாயில்லாதவர். பிரபாகரனை சர்வாதிகாரி என பதிவு செய்வதற்காகவா கருணாநிதி தமிழக முதல்வராக இருக்கிறார்? தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
ஒரு லட்சம் தமிழர்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும் என்று பேசியிருந்தார் சம்பத்.
இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீஸார், நாஞ்சில் சம்பத் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் அவரைக் கைது செய்வதற்காக தனிப்படையினர் நேற்று முன்தினம் கோவை வருவதாக இருந்த சம்பத்தைக் கைது செய்ய காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து நேற்று சென்னையில் நடந்த மதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சம்பத் ரயில் மூலம் சென்னை வந்தார்.
அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்ய திருப்பூர் போலீஸார் காத்திருந்தனர். ஆனால் சம்பத் எழும்பூர் வராமல் வழியிலேயே இறங்கி விட்டார்.
மேலும் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். கூட்டம் முடிந்து வரும்போது கைது செய்யலாம் என மதிமுக தலைமைக் கழகமான தாயகத்திற்கு வெளியே போலீஸார் காத்திருந்தனர். ஆனால் மெயின் வாசல் வழியாக வெளியேறாமல் வேறு வழியாக சம்பத் வெளியேறிப் போய் விட்டார்.
குழம்பிப் போன போலீஸார், அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டில் சம்பத் தங்கியிருக்கலாம் என சந்தேகப்பட்டு அங்கு விரைந்தனர். ஆனால் அங்கும் அவர் இல்லை.
இப்படி போலீஸாரை டபாய்த்த நாஞ்சில் சம்பத் நேற்று இரவு தாம்பரத்தில் நடந்த, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்து இறந்தவர்களுக்கு நடந்த வீர வணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. விரைந்து வந்த போலீஸார் சம்பத் வந்ததும் அவரைக் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் மதிமுக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே குவிந்தனர். முன்னெச்சரிக்கையாக போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் சம்பத்தை திருப்பூர் போலீஸார் வேனில் திருப்பூர் கொண்டு சென்றனர்.
கோவை சிறையில் அடைப்பு
திருப்பூர் கொண்டு செல்லப்பட்ட நாஞ்சில் சம்பத்தை போலீஸார் இன்று அதிகாலையில் அவினாசி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது மாஜிஸ்திரேட், சம்பத்தை 20ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பத்தை கோவை கொண்டு சென்று அங்குள்ள மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.