ஊட்டி மலையில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி!
ஊட்டி: நிச்சயதார்த்த கோஷ்டி சென்று கொண்டிருந்த வேன் ஒன்று ஊட்டி மலைப் பாதையில் கவிழ்ந்து விழுந்தது. அதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள காந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மகளுக்கு கொடுமுடியில் உள்ள தனது உறவினர் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய தனது உறவினர்கள் 50 பேருடன் இரண்டு வாகனங்களில் கொடுமுடி புறப்பட்டார்.
இந்நிலையில் வேன் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பாலம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. வலதுபுறம் இருந்த 50 அடி பள்ளத்தில் உருண்டது. வேனில் பயணம் செய்தவர்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் சிக்கிய 31 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குப்புச்சாமி(55), பார்வதி(46) ஆகிய இருவர் பரிதாபமாக பலியானார்கள். மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிச்சயதார்த்தம் செய்ய சென்றவர்கள் விபத்தில் பலியானதை அடுத்து இரு வீட்டாரும் சோகத்தில் முழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications