விஜயகாந்த்-பிரேமலதாவும் போட்டி?

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவினர் நேற்று முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் விண்ணப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது.
பெரும் திரளான கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றனர். கட்சி அலுவலகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் மனுக்களை வினியோகித்தனர்.
கட்சியின் சென்னை மத்திய மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர், விஜயகாந்த்துக்கு மத்திய சென்னையில் சீட் கோரி விண்ணப்பம் தந்தார்.
அதே போல் தென் சென்னையில் விஜயகாந்த் போட்டியிட கிரிராஜ் மனு செய்தார். இன்று ஆரணி தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட சடகோபன் என்பவர் மனு தந்தார்.
இதனால் விஜயகாந்த் எம்.பி. தேர்தலில் போட்டியிடக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரேமலதாவுக்கும் மனு:
அதே போல கோவை தொகுதியில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா போட்டியிட கோரி பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் கோவையில் பிரேமலதா போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தே.மு.தி.க. அதிக ஓட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications