உண்ணாவிரதம்..இது பாமகவின் இன்னொரு 'சிக்னல்'!

வழக்கமாக தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த முறை அணி மாறவில்லை. இந் நிலையில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குச் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார்.
அதிமுக தரப்பும் பாமகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளைத் துவக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான் இன்று பாமக மகளிர் அணியின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா திடீர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நேற்று உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த அதே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தான் பாமக உண்ணாவிரதமும் இன்று நடக்க இருந்தது.
இந் நிலையில் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் துவங்கிய சில மணி நேரங்களில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில்,
பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தையோ, மீண்டும் எப்போது உண்ணாவிரதம் நடக்கும் என்பதையோ அறிவிக்கவில்லை.
இது ஜெயலலிதாவை ப்ளீஸ் செய்யும் முயற்சியாகவே கருதப்படுகிறது. அவர் உண்ணாவிரதம் இருந்த அடுத்த நாளே பாமக மகளிர் அணி அதே இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால் அது அவருக்குப் போட்டியாக நடத்தப்படுவது போல அமைந்துவிடும் என்பதாலேயே அதை ஒத்தி வைத்தார் ராமதாஸ் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications